சென்னை
மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டதைப் போல கச்சத்தீவு பிரச்சினையிலும் சட்டரீதியாக நிரந்தர தீர்வு காணப்படும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம்
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது அனிதா ராதாகிருஷ்ணன் (தி.மு.க.), மகாலிங்கம் என்கிற வி.பி.நாகமலை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்டு), கணேஷ்குமார் (பா.ம.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) ஆகியோர் பேசினார்கள். அதற்கு பதில் அளித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
கருணாநிதி ஆட்சியில் கச்சத்தீவு தாரைவார்ப்பு
இந்தியாவின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்தபோது இந்தப் பிரச்சனை எழவில்லை. தமிழக மீனவர்கள் கச்சத்தீவின் அருகில் மீன் பிடித்து தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974 –ம் ஆண்டு, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டின் முதல்–அமைச்சராக இருந்தவர் கருணாநிதிதான்.அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக, தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதையெல்லாம் இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. மாறாக, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
1991–ம் ஆண்டு நான் முதன் முறையாக முதல்–அமைச்சராக பொறுப்பேற்றவுடன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிடம் இருந்து காப்பாற்ற கச்சத்தீவினை மீட்பதை தவிர வேறு வழி இல்லை என்று முடிவெடுத்து, இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமரை நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தினேன்.
மத்திய அரசை வலியுறுத்தவில்லை
குறைந்தபட்சம் நிரந்தரமான குத்தகை என்ற முறையிலாவது, தமிழக மீனவர்கள் கச்சத்தீவிற்கு சென்று மீன்பிடிக்கும் உரிமையையாவது பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமரை பலமுறை வற்புறுத்தி இருக்கிறேன். இருப்பினும், மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.2006–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்–அமைச்சராக இருந்தவர் கருணாநிதி. அவர் தயவில்தான் மத்திய அரசும் இருந்தது. தன் நலத்திற்காக பல மிரட்டல்களை மத்திய அரசுக்கு விடுத்த கருணாநிதி, தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக கச்சத்தீவினை மீட்டுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி இருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் கச்சத்தீவு பற்றிய எண்ணமே கருணாநிதிக்கு இல்லாமல் போய்விட்டது.
டெசோ மாநாட்டில் தீர்மானம்
ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்டு 12–ந்தேதி நடைபெற்ற புத்துயிரூட்டபட்ட ‘டெசோ’ மாநாட்டில், ‘‘கச்சத்தீவை இந்தியா மீண்டும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதோடு, தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் இந்தியக் கடற்படை தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.1974–ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோது, அப்போது முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதி அதைத்தடுக்க தவறிவிட்டார். மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி பகுதியை 1960–க்கு முன்பு கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தாரைவார்க்க முயன்றபோது, அதனை எதிர்த்து அப்போதைய மேற்கு வங்க அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘இந்திய நாட்டுக்கு சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்கு கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்’’ என 1960–ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
வாழ்வாதாரமே கேள்விக்குறி
மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கையை 1974–ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்–அமைச்சர் கருணாநிதி பின்பற்றி இருப்பாரேயானால், கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்காது. ஆனால் அன்றைய தமிழ்நாடு முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதி இதைச் செய்ய தவறிவிட்டார்.கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதன் காரணமாக, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் இன்றளவும் தொடர்கிறது. தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்தெறிவதையும், அவர்களை ஆயுதங்களால் துன்புறுத்துவதையும், இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். தமிழக மீனவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. தங்களது உயிரைப் பணயம் வைத்து மீன்பிடித் தொழிலை தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதும், பிரதமரை வலியுறுத்தியும், தமிழக அரசு அதிகாரிகள் மூலம் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டும் அவர்களை மீட்டெடுத்து இருக்கிறேன்.தமிழக மீனவர்களும் இந்திய நாட்டு குடிமக்கள்தான் என்பதை பிரதமருக்கு உணர்த்தி, வலுவான, உறுதியான, ஆக்கப்பூர்வமான, ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்து இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன்.
தொடர்ந்து மவுனம் சாதிப்பு
பரம்பரை பரம்பரையாக, மீன்பிடித்து வரும் அப்பாவி தமிழக மீனவர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள இலங்கை அரசுக்கு அறிவுரை கூற வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறேன். ஆனால், மத்திய அரசோ தமிழக மீனவர்கள் என்றால் இந்திய நாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்தோ என்னவோ, தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.மத்திய அரசின் கையாலாகாத்தனம் காரணமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறை நடைபெற்று இருக்கிறது. இது உண்மையிலேயே கவலை அளிக்கக்கூடியது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தமிழக மீனவர்களின் பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் எனில், கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு கிடைத்திட வேண்டும். எனவேதான், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கிணங்க, கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, இதுகுறித்த இந்தியா–இலங்கை உடன்படிக்கை செல்லாது என தீர்ப்பளிக்க வேண்டும் என்று 2008–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் நான் வழக்கு தொடுத்துள்ளேன்.இந்த வழக்கில், தமிழக அரசின் வருவாய்த்துறையும் தன்னை இணைத்து கொண்டுள்ளது. இந்த வழக்கை விரைவில் எடுத்து விசாரிக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பல்வேறு சலுகைகள்
இதுமட்டுமல்லாமல், இந்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும்போது, அவர்களை மீட்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எனது அரசு எடுத்து வருகிறது. மீனவர்களின் இன்னல்களை உணர்ந்து, அவர்களுக்கென பல்வேறு சலுகைகளை எனது அரசு அளித்து வருகிறது.ராமேஸ்வரத்தைச்சேர்ந்த 5 மீனவர்கள் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, போதைப் பொருள் கடத்தியதாக கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 5 மீனவர்கள் சார்பாக இலங்கை நீதிமன்றத்தில் வாதாடி, அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான நடவடிக்கையை எனது அரசு எடுத்துள்ளது.
நிவாரண உதவி ரூ.2 லட்சம்
அந்த வழக்கிற்கான செலவுகளையும் எனது தலைமையிலான அரசு ஏற்றுள்ளது. இந்த 5 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையாக, தலா ரூ.2 லட்சம் எனது தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டு உள்ளது.இதுமட்டுமல்லாமல், அவர்களது குடும்பங்கள் அன்றாட வாழ்க்கை நடத்திடும் வகையில், மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் தவிர, அண்மையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைச்சாலைகளில் உள்ளனர்.
இனிமேலாவது நடவடிக்கை
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல்களை இந்திய அரசு கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கும், கொடூரமாக துன்புறுத்தப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வலுவான நடவடிக்கைகளை ராஜதந்திர முறையில் இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும் என்றும், டெல்லியில் உள்ள இலங்கை நாட்டு தூதரக அதிகாரியை நேரில் வரவழைத்து, இந்தியாவின் வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த தருணத்தில் மத்திய அரசைக் கேட்டுக்கொள்வதோடு, இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட இந்தியா–இலங்கை நாடுகளுக்கு இடையேயான கச்சத்தீவு உடன்படிக்கையை இந்தியா திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
சட்டரீதியாக நிரந்தர தீர்வு
இல்லையெனில், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ய சுப்ரீம் கோர்ட்டை அணுகி வெற்றி பெற்றதைப்போல், கச்சத்தீவு பிரச்சினையிலும் என்னால் சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வரும்போது, வலுவான வாதங்களை முன் வைத்து சட்டரீதியாக இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.










