தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக குரல்கொடுப்பதை இனவாதம் என பெரும்பான்மை சமூகம் பேசுவதாக குறிப்பிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் அடக்கியாளப்படுவதை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என இவர்கள் கருதுகின்றார்களா என கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ‘இலங்கை அரசியல் யாப்பு’ எனும் நூல் வெளியீட்டில் கலந்துகொள்ள முடியாத காரணத்தால் தமது உரையை வடக்கு முதல்வர் அனுப்பிவைக்க, அதனை பேராசிரியர் சிற்றம்பலம் வாசித்தார். குறித்த உரையிலேயே வடக்கு முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
”இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த நூறு ஆண்டு காலங்களாக தமிழ் மக்கள் தமது அரசியல் முன்னெடுப்புக்களில் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதும் அதன் விளைவாக தோல்விகளை தழுவிக் கொள்கின்ற செயற்பாடுகளும் நடைபெற்றுவருவது நாம் அனைவரும் அறிந்துள்ள விடயம். இந்நூலில் குறிப்பிட்டவாறு தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு வெற்றிக்கான வழிவகைகளைத் தேடுவதற்கு நாம் தயார் இல்லை எனின், தொடர்ந்தும் நாம் தோல்விகளை சந்திப்பதற்கு தயாராகின்றோம் என்பதே யதார்த்தம் ஆகின்றது.
இலங்கையில் வாழும் தமிழர்களும் ஓரணியின் கீழ் ஐக்கியப்பட்டு தமது உரிமைக்காக வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு என்ற பேதங்கள் இன்றி மொழியால் ஒன்றுபட்டு உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய காலம் கனிந்து வந்துள்ளது.
சில வேளைகளில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றியும் அவர்களின் சுய நிர்ணய உரிமை பற்றியும் சில சிங்கள தலைவர்களும் இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட தலைவர்களும் அவ்வப்போது சார்பான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த போதும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர்கள் தமது கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு தமிழின அழிப்பை ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தலைவர்களாக மாற்றம் பெற்றது நாம் தெரிந்ததே. அத்தோடு, தமிழர்கள் இனவாதம் பேசுவதால்தான் தாமும் பேசுவதாக கூறுகின்றார்கள்.
தமிழர்கள் தமது பாரம்பரிய நிலங்களில் குடியேறுவதற்கும், அங்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தமது கலாசாரங்களை பேணிப் பாதுகாப்பதற்கும், இராணுவ பிரசன்னம் அற்ற இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்காகவும் விரும்பி மேற்கொள்ளும் நியாயபூர்வமான போராட்டங்கள், கோரிக்கைகள் ஆகியன சிங்கள தலைமைகளுக்கு இனவாதத்தை தூண்டுகின்ற ஒரு செயலாகத் தென்படுகின்றது. அதனால் உரிமைக்காக குரல்கொடுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களை சிறையில் அடைக்க வேண்டும், ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் எனச் சிலர் சிங்கள பேரினவாதிகளாக மாறி கொக்கரிக்கின்றார்கள்.
எமது உரிமைக்காக நாம் குரல் கொடுக்கின்ற போது இனவாதம் பேசுகின்றோம், சிங்கள மக்களை சினமடையச் செய்கின்றோம், இந்த நாட்டில் மீண்டும் ஒரு முறை இனக்கலவரங்களை உண்டாக்குவதற்கு முயற்சிக்கின்றோம் என்று கூறுகின்றார்கள். தமிழ் மக்களை அடக்கியாள முயற்சித்து, அவர்கள் அவை சார்பான நடவடிக்கைகள் எடுப்பதை நாம் கண்டும் காணாதது போல் இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றார்களா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.











