ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ நிகழ்வு வலுப்பெற்று வரும் நிலையில், அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக புதிய பிராந்திய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), உலக உணவுத் திட்டம் (WFP), ஐ.நா. பெண்கள் அமைப்பு (UN Women), உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) ஆகியவை இணைந்து இந்த மதிப்பீட்டை தயாரித்துள்ளன.
வலுப்பெறும் எல் நினோ
ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்கள் தற்போது பல்வேறு அபாயங்கள் ஒன்றுடன் ஒன்று இணையும் சிக்கலான காலகட்டத்திற்குள் நுழைந்து வருவதாக அறிக்கை எச்சரிக்கிறது.
வலுப்பெற்று வரும் எல் நினோ, நேர்மறையான இந்தியப் பெருங்கடல் இருமுனை நிகழ்வு (Indian Ocean Dipole – IOD) ஏற்படுவதற்கான சாத்தியம் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியால் ஏற்படும் தொடர்ச்சியான பொருளாதார தாக்கங்கள் ஆகியவை பிராந்தியத்தின் அபாயங்களை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய எல் நினோ நிகழ்வு, பதிவுகளில் காணப்பட்ட மிக வலுவான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக அமையக்கூடும் என்றும், இது 2027ஆம் ஆண்டு வரையிலும் நீடிக்கக்கூடும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இலங்கைக்கு அதிக மழைப்பொழிவு அபாயம்
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளில் வறட்சி தொடர்பான அபாயங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் சராசரியை விட அதிகமான மழைப்பொழிவு மிக முக்கியமான அபாயமாகக் கருதப்படுகிறது.
இந்த மதிப்பீட்டின்படி, இலங்கை “அதிகரித்த கவலைக்குரிய” (Elevated Concern) நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக, 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சராசரியை விட அதிகமான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் முதல் அபாயம் அதிகரிக்கலாம்
இந்த அபாயம் ஒக்டோபர் மாதம் முதல் மிகவும் முக்கியத்துவம் பெறும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது இலங்கையின் இரண்டாவது இடைப்பருவப் பருவமழை (Second Inter-Monsoon) காலத்துடன் ஒத்துப்போகிறது. இந்தக் காலம் பொதுவாக நாட்டில் அதிக மழைப்பொழிவு காணப்படும் காலகட்டங்களில் ஒன்றாகும்.
அதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) காலமும் ஆரம்பிக்க உள்ளதால், அதிக மழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளப்பெருக்கு அபாயங்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பொருளாதார தாக்கங்களும் கவலைக்குரியது
காலநிலை தொடர்பான அபாயங்களுக்கு மேலதிகமாக, அதிகரிக்கும் எரிபொருள், உரம் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் காரணமாக ஏற்படும் பொருளாதார அழுத்தங்களும் இலங்கைக்கு சவாலாக அமையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அடுத்துவரும் மாதங்களில் காலநிலை மாற்றங்கள் மற்றும் மழைப்பொழிவு நிலைமைகளை நெருக்கமாகக் கண்காணிப்பது முக்கியமானதாகும்.











