புனர்வாழ்வு அதிகாரசபை நடாத்தும் சுயதொழில் கடன் திட்டத்தின் ஊடான உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நல்லூர் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்று வருகின்றது.
இன்று 30.09.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இக்கண்காட்சி நாளை 01.10.2016 சனிக்கிழமை இரவு 7 மணிவரைக்கும் இடம்பெறும்.
இந்தக்கண்காட்சியில் கிராமமட்ட உள்ளூர் உற்பத்திக் குழுக்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுப் பண்டங்கள், கிருமிநாசினி வகைகள், ஆடைகள், தெங்குசார் உற்பத்திக்குப் பொருட்கள், பனை சார் உற்பத்திப்பொருட்கள், பழ மரக் கன்றுகள், மெழுகாலான அழகு சாதனப்பொருட்கள், காளான்- கற்றாழை மூலிகை பானங்கள் ஆகியவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்வதனை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களே சுயதொழில் உற்பத்தியிலும், கண்டுபிடிப்புகளிலும் சாதித்து வருவதனை நேரில் காணக்கூடியதாக இருந்தது.

மூலிகை உணவுற்பத்தி கண்டுபிடிப்பில் ஜனாதிபதி விருது பெற்ற சாய்ராணி
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்ததிருமதி சாய்ராணி என்கிற சுய தொழில் முயற்சியாளர் குறிஞ்சா மற்றும் வல்லாரை சத்துமா-புட்டுமா, வல்லாரை- குறிஞ்சா அப்பளம், ஆகியவற்றை புதிதாக தயாரித்து கடந்த 2013 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில்இரண்டாம் இடத்தை பெற்று ஜனாதிபதியிடம்விருது பெற்று சாதித்துள்ளார்.
உண்மையில் வல்லாரை, குறிஞ்சா சத்துமா குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிக உகந்தது மட்டும்அல்லாமல் சலரோகம், பிரஷர் நோயாளிகளின் உடல்ஆரோக்கியத்துக்கும் சிறந்த உணவாகும்.

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் இளைஞரான அல்லைப்பிட்டி மகேஸ்வரநாதன் கிரிசன்
இன்றைய காலப் பகுதியில் இளைஞர்கள் எல்லோரும் விவசாயத்தை கண்டு கொள்ளாமல் இருக்கும் சமயத்தில் இயற்கை விவசாயத்தில் சாதித்து வருகிறார் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த மகேஸ்வரநாதன் கிரிசன் என்கிற இளைஞர்.
இயற்கை விவசாயத்துக்கு பல்வேறு இயற்கையான கிருமிநாசினிகளை தயாரிக்கும் இவர் தன்னிடம் உள்ள குறுகிய நிலப்பரப்பில் இயற்கையான முறையில் விவசாயம் செய்து வருவதோடு கால்நடைகளும் வளர்த்து வருகிறார்.

செயற்கைபீட நாசினிகளால் மரக்கறிகள் நஞ்சாவதால் புற்றுநோய்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகளில் நிரூபணமான நிலையில் இவரது இயற்கை விவசாயம் மூலமான விவசாய உற்பத்திப் பொருட்கள் மக்களால் அதிகம் நுகரப்பட வேண்டும்.
தான் இயற்கை விவசாயம் மூலம்உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக இவர் கூறுகிறார்.























