வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகள் ஏற்படும் என சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில மாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்குவது மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அரசாங்கத்தை எச்சரிப்பது எனது பொறுப்பு.
இன்னமும் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரல் தொடர்கின்ற சூழலில் அவர்களின் கைகளில் காவல்துறை அதிகாரங்கள் கிடைப்பது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமையும்.
அனைத்துலக, உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து போகாமல் அரசாங்கம் 13வது திருத்தம் குறித்து கவனமாக பரிசீலிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததுடன்,
வடக்கு மாகாணசபை நிர்வாகம் ஈழத் திட்டத்தை தொடரக் கூடும்.வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்த வேண்டிய தேவை உள்ளது.
ஆனால் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு நாம் கடுமையான விலைகளைக் கொடுத்துள்ள நிலையில், இது இன்னொரு போர்ச்சூழலை ஏற்படுத்துவதற்கான எமது முட்டாள்தனமான செயலாக அமையும்.
எனது விருப்பத்தை அரசாங்கத்தின் மீது திணிக்க முடியாது. ஆனால், 13வது திருத்தத்தின் குறைபாடுகள் தொடர்பாக அவர்களுக்கு எடுத்துக் கூறுவேன்.
அது இன்னொரு மோதலுக்கான அடிப்படையாக இருக்கும் அரசாங்கம் உடனடியாக 13வது திருத்தம் குறித்து பரந்தளவிலான விவாதங்களை நடத்த வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக பகிரங்க விவாதம் நடத்தப்பட வேண்டும்.வடக்கு மாகாணத்துக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்குவது பாதுகாப்புக்கு பிரதான சவாலாக அமையக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்ததுடன்
அரசாங்கம் மேற்கொள்ளக் கூடிய தீவிரவாத எதிர்ப்பு விசாரணைகளில், வடக்கில் உருவாகக் கூடிய முரண்பட்ட நிர்வாகம் ஒன்று தலையிடக் கூடும்.
விடுதலைப் புலிகள் இந்திய சிறிலங்கா உடன்பாட்டை ஏற்றுக் கொண்டிருந்தார்களேயானால் மிகச் சுலபமாக ஈழத்தை அடைந்திருக்க முடியும்.
தனியான நிர்வாகத்தை கோருவதற்கு வசதியான 13வது திருத்தத்தை அவர்கள் அப்போது சரிவரப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.