கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள. அதை அக்னியின் வடிவம் என்பார்கள். அது ருத்ர அம்சமாகும். சில தலங்களில் பனைமரம் பொற்பனம்பழங்களைத் தந்தது என்றும் புராணங்கள் கூறுகின்றன.
கார்த்திகை தீப நாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதை சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்துக்கு பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள்.மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனை செய்து, கோயிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிரு க்கும் இந்தக் கூம்புகளுக்கு முன்பாக எழுந்தருளச் செய்வார்கள். பின்னர், சுவாமிக்கு தீபாராதனை செய்து, அந்தச் சுடரால் இந்த சொக்கப்பனைகளைக் கொளுத்துவர். சுடர் வேகமாகப் பரவி கொளுத்துவர் கொழுந்துவிட்டு எரியும். அந்த ஜோதியை சிவமாகவே எண்ணி வழிபடுவார்கள். இது, அக்னி மய லிங்கமாகும்.
சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை தைலத்துடன் சேர்த்து ரட்சையாக காப்பாக பூசிக் கொள்வார்கள். சாம்பலை எடுத்துச் சென்று வயக்காடுகளிலும் தூவுவார்கள். இதனால் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை. சில தலங்களில் இரட்டை சொக்கப்பனைகளைக் கொளுத்தி வழிபடுகின்றனர். திருமால்,ஆலயங்களிலும் சொக்கப்பனை விழா தனிச்சிறப்புடன் நடைபெறுகிறது.













































