இங்கிலாந்தின் பல நகரங்களில் 3 வாரங்களுக்கு மேல் குப்பை அள்ளாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது.

3 வாரங்களாக வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள குப்பையை எடுத்து செல்ல சுகாதார துறை பணியாளர்கள் வரவில்லை. இதனால் பல நகரங்களிலும் துர்நாற்றம் வீசுகிறது.

பிரிஸ்டோல், மான்செஸ்டர், பர்மிங்ஹாம், எடின்பர்க் உள்பட இங்கிலாந்தின் பல முக்கிய பகுதிகளில் மூட்டை மூட்டையாக குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் நோய் வரும் அபாயம் உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சுகாதார துறை அலுவலகத்துக்கு ஏராளமானோர் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள நகரங்கள், டவுன்களில் தெருவுக்கு தெரு வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி வழிகின்றன.

பர்மிங்காமில் உள்ள ஹார்போர்ன் பகுதி மக்கள் கூறுகையில், டிசம்பர் 16ம் திகதியில் இருந்தே குப்பைகளை எடுத்து செல்லவில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கதவை திறந்தாலே மலைபோன்று குவிந்து கிடக்கும் குப்பை மூட்டைகள்தான் தெரிகின்றன என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், சூறாவளி காற்றும் வீசியதில் குப்பை மூட்டைகள் சிதறி தெரு முழுவதும் குப்பைகள் பரவிவிட்டன.

இதுகுறித்து பர்மிங்ஹாம் நகர கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று குப்பை சேகரிப்பு பணி நடக்காது என்று அறிவிக்கப்பட்டது. வாரத்துக்கு ஒரு முறை குப்பைகள் சேகரிக்கப்படும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் அளவுக்கு அதிகமாக குப்பைகள் குவிந்துவிட்டன. அவசரமாக குப்பை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள், குப்பைகள் மறுசுழற்சி மையங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *