இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பாவூர்சத்திரத்தில் இன்று வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதையொட்டி இன்று பாவூர்சத்திரம் பஸ் நிலையம், மேலபஸ் நிலையம், கீழப்பாவூர், கடையம், சுரண்டை, தென்காசி ஆகிய சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. கார், வேன், ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. மேலும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பாவூர்சத்திரம் மெர்க்கண்டைல் வங்கி எதிரே வியாபாரிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு வணிகர் சங்க தலைவர் ஜெயசந்திரன் தலைமை தாங்கினார்.
உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட அனைவரும் இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்ஷ மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பினர்.