விந்தை உலகம்

பஞ்சாப்பில் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணிநேரத்தில் கட்டி முடித்த தொழில் அதிபர்

மொஹாலி: பஞ்சாபின் புறநகர் பகுதியில் தொழில் அதிபர் ஒருவர் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணிநேரத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று ரூ.1,000 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு நிறுவனத்தை நடத்தி வரும் தொழில் அதிபர் ஹர்பல் சிங் முடிவு செய்தார். இதையடுத்து அந்தக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடந்தது. பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து கட்டுமானப் பணியாளர்கள் மளமளவென வேலையைத் துவங்கி குறிப்பிட்ட 48 மணிநேரத்திற்குள் 10 மாடிக் கட்டிடத்தை கட்டி முடித்தனர். முதல் 3 மாடிகள் வெறும் 6 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்டன. இந்த கட்டிடத்தை கட்ட ஏற்கனவே பின்னப்பட்ட செண்டிரிங் மற்றும் தூண்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 200 டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 200 பணியாளர்கள், டெக்னீஷியன்கள், என்ஜினியர்கள் சேர்ந்து இந்த சாதனையை செய்துள்ளனர். இந்த கட்டிடத்திற்கு தேவையான பொருட்கள் அருகில் உள்ள கம்பெனியில் கடந்த 2 மாதங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹர்பல் சிங் கூறுகையில்,

என் வீட்டை கட்டிமுடிக்க 2 ஆண்டுகள் ஆனது. அப்போது தான் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணிநேரத்தில் கட்ட வேண்டும் என்று எனக்கு தோன்றியது என்றார்.

சன்டிகரில் உள்ள ஜே.டபுள்யூ. மாரியட் ஹோட்டலின் அதிபரும் ஹர்பல் சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *