அமெரிக்கா: தொடரும் சட்ட வல்லுனர்களின் மரணத்தால் விழுந்துள்ள மர்ம முடிச்சு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள காப்மன் மாவட்டத்தின் அரசாங்க சட்டதரனி மைக் மெக்லெலாண்டு, அவரது மனைவி சிந்தியா வுட்வார்டுடன், நேற்று அவர்களது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்ற ஜனவரி மாதம், இதே பகுதியைச் சேர்ந்த மைக் ஹாஸ்சி(57) என்ற அரசாங்க சட்டதரனி சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து நடந்துள்ள சட்டத்துறை வல்லுனர்களின் மரணங்கள், இதன் பின்னணியில் பெரிய திட்டங்கள் இருக்கக்கூடுமோ என்ற ஐயத்தையும், இது தொடரக்கூடும் என்ற பயத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அச்சமுற்ற மற்றவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இறந்த மைக் ஹஸ்சி, அமெரிக்காவின் வெள்ளை இனத்தைச் சேர்ந்த, சுமார் 20,000 பேருக்கும் மேலாக ஒரு குழுவாக செயல்பட்டு வந்த அமெரிக்கன் பிரதர்ஹுட் என்ற கொள்ளைக்கூட்டத்திற்கு எதிராகத் துப்பறிந்தவர் ஆவார். இதனால் அந்தக் கூட்டம் சட்டத்துறையினரைப் பழிவாங்கலாம் என்ற ஒரு கணிப்பு சென்ற டிசம்பர் மாதம் எழுந்தது.

தற்போது நடந்துள்ள இந்த இரு கொலைகளும் அந்தக் கருத்தை ஊர்ஜிதம் செய்வதுபோல் அமைந்துள்ளன. எனினும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று காவல்துறை உயரதிகாரி அல்பாக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *