அதிகாரங்களைக் பறிக்கக் கூடாது – சிறிலங்காவுக்கு இந்தியா எச்சரிக்கை

அதிகாரங்களைக் பறிக்கக் கூடாது – சிறிலங்காவுக்கு இந்தியா எச்சரிக்கை

சிறிலங்கா அரசாங்கம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, காவல்துறை அதிகாரங்களை பறித்துக் கொள்வதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று இந்தியா எச்சரித்துள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக, மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களைப் பறிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளியான ஊடகத் தகவல்கள் குறித்து, ஜி.எல்.பீரிசிடம் சல்மான் குர்ஷித் கவலை வெளியிட்டுள்ளார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் கடப்பாட்டுக்கு முரணான எந்த நடவடிக்கையிலும் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினரால் உயர்பாதுகாப்பு வலயத்துக்கென பொதுமக்களின் காணிகள் பறிக்கப்படுவதற்கும் சல்மான் குர்ஷித் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு முரணானது என்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.