“எழுக தமிழ்” பேரணிக்கான சகல ஆயத்தங்களும் நிறைவு.

“எழுக தமிழ்” பேரணிக்கான சகல ஆயத்தங்களும் நிறைவு.

தமிழ் மக்கள் பேரவையின் “எழுக தமிழ்” பேரணி நாளை சனிக்கிழமை (24.09.2016) அன்று சரியாக காலை 9.00 மணிக்கு நல்லூர் கோவில் சுற்றம், மற்றும் யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா சந்தி ஆகிய இடங்களில் இருந்து இரு அணிகளாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பலாலி வீதி இலுப்பையடிச் சந்தியில் இணைந்து, யாழ். நகரூடாக கோட்டை முனியப்பர் கோவில் சுற்றத்தை அடையும்.

வடக்கின் முதல்வரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமாகிய கொளரவ சீ.வி விக்னேஸ்வரன் அவர்கள் நல்லூரில் ஆரம்பிக்கும் பேரணியை ஆரம்பித்து வைத்து, பின்னர் நாழ். கோட்டை முன் முனியப்பர் கோவில் முற்றத்தில் பேரணியில் திரண்டு வந்த தமிழ் மக்கள் முன் தனது விசேட உரையினை நிகழ்த்துவார்.

இதேவேளை, தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராகிய இருதய வைத்திய நிபுணர் லக்ஸ்மன் அவர்கள், தமிழ் மக்களின் இப்பேரணியின் பிரகடணத்தை நிகழ்த்துவார்.

தமிழ் மக்களின் பேராதரவுடன் நடைபெற இருக்கும் இப்பேரணியை குழப்பும் நோக்குடன் சிலர் விசமத்தனமான பிரச்சாரங்களை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் எம்மால் அறிய முடிகின்றது. குறிப்பாக ஒரு சில ஊடகங்களும், ஒரு சில தனி நபர்களும் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான தகவல்களை இறுதி நேரத்தில் வெளியிட்டு மக்களை குழப்ப முயல்வதாக நாம் அறிகின்றோம்.

எனவே, சகல விதமான அனுமதிகளும் பெற்று, போக்குவரத்து ஒழுங்குகளுக்கான காவல்துறை ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள இப்பேரணியை, இறுதி நேர பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் குழப்ப முனையும் சக்திகளை எம்மக்கள் வழமை போல் உதாசீனம் செய்து, தமது வரலாற்றுக் கடமையை இத்தருணத்தில் செவ்வனேசெய்து, எமது இனத்தின் இருப்பை காப்பாற்றிக்கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கில் அணிதிரளும்படி உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்..

நன்றி.
தமிழ் மக்கள் பேரவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *