மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் கண்ணாட்டி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் நேற்று புதன் கிழமை இரவு 11 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அடம்பன் பங்குத்தந்தை லக்கோன்ஸ் பிகிராடோ அடிகளார் தெரிவித்தார். அடம்பன் கண்ணாட்டி கிராமத்தில் உள்ள புனித பிலிப் நேரியர் ஆலயத்திற்கு முன்பாக புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்தது.
பல வருடங்களாக குறித்த சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. யுத்த இடப்பெயர்வுகளுக்கு மத்தியிலும் எவ்வித சேதமும் இன்றி குறித்த சொரூபம் காணப்பட்டது. கண்ணாட்டி பிரதான வீதியில் குறித்த சொரூபம் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் அவ்விடத்திற்கு வந்த இனம் தொரியாத நபர்கள் கண்ணாடிப்பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபத்தை தூக்கி எடுத்து சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு கொண்டு சென்று நடு வீதியில் உடைத்து துண்டாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாங்கள் உடனடியாக விடத்தல் தீவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம் என அருட்தந்தை தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த வீதியில் ஒன்று திரண்ட மக்கள் வீதியை மறித்து போக்கு வரத்தை தடை செய்தனர்.
பின் உரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதோடு பொலிஸ் தடைய நிபுணர்கள் வருகை தந்து தடையங்களை பெற்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அடம்பன் பங்குத்தந்தை லக்கோன்ஸ் பிகிராடோ அடிகளார் மேலும் தெரிவித்தார்.