தேர்தலின் மூலம் சர்வதேசத்தை திருப்திபடுத்தும் இலங்கை அரசாங்கத்தின் பாசாங்கை ஏற்க முடியாது!- இந்தியா

இலங்கை அரசாங்கம் 13ம் திருத்தச்சட்டத்தை சீராக்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் வருத்தம் அடைந்துள்ளதாக “த இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது கொழும்பு அரசாங்கம் மேற்கொண்டு வரும் 13ம் திருத்தச் சட்டத்தின் மீதான திருத்தங்கள், வினைத்திறன் அற்றதாக அமையும் என்று குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இவ்வாறு 13ம் திருத்தச் சட்டத்தில் சீர்த்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், வடமாகாண சபைத் தேர்தலை புறக்கணிக்கவிருப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கொழும்பு அரசாங்கம் ஒரு பக்கம் வடக்கில் தேர்தலை நடத்துவது போல பாசாங்கு செய்து, சர்வதேச நாடுகளை திருப்திப்படுத்துகின்ற அதேநேரம், மாகாண சபைகளின் அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொள்ள இரகசிய நடவடிக்கை மேற்கொள்கிறது.

இதனை எந்த வகையிலும் இந்திய மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்திய வெளிவிகார அமைச்சர் சல்மன்குர்ஸித், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் தொடர்பு கொண்டு, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இந்து – இலங்கை உடன்படிக்கையின் கீழ் அமைந்த 13ம் திருத்தச்சட்டத்தை எந்த மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படகூடாது என்று சல்மான் குர்சித் வலியுறுத்தியதாகவும், த இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *