தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இடைக்கால நிர்வாகசபைக் கோரிக்கை நியாயமற்றது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கு கிழக்கை ஒன்றிணைத்து இடைக்கால நிர்வாக சபையொன்றை உருவாக்க வேண்டுமென அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இலங்கைப் பிரச்சினை பற்றி பேசுவதில் பயனில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மாறாக அரசாங்கத்துடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாடுகளை தலையீட செய்யக் கோருவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே இவ்வாறு இடைக்கால நிர்வாக சபையைக் கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.






