யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழது அலுவலக செய்தியாளரான குணாளன் டிலீப்அமுதன் என்பவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளார். யாழ்.கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள உதயன் அலுவலகத்தில் தனது பணியை முடித்துக்கொண்டு இன்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் தெல்லிப்பளையிலுள்ள அவரது வீட்டுக்குச்சென்று கொண்டிருக்கும் போது ஓட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள் மகாஜனக் கல்லூரிக்கு அருகில் இவரைத தாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். சம்பவத்தையடுத்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் பற்றி கருத்து வெளியிட்ட குணாளன் டிலீப்அமுதன் பின்தொடர்ந்து வந்த ஓட்டோவொன்றிலிருந்தவர்களே அருகாகவுள்ள கால்வாயொன்றினுள் தன்னை மோட்டார் சைக்கிளுடன் தள்ளி வீழ்த்தியதாக தெரிவித்தார்.ஓட்டோவின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததாகவும் கால்வாயினுள் வீழ்ந்திருந்த நிலையினில் பின்னால் வந்திருந்த ரிப்பர் வாகனமொன்றை கண்டு அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.இதனால் வாகன இலக்கமெதனையும் அடையாளம் காணமுடியாது போய்விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலய நில ஆக்கிரமிப்புள்ளிட்ட சமகால அரசியல் விவகாரங்களை அவர் கூடியளவினில் அறிக்கையிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.